அருள்மிகு அக்னீஸ்வரர் சுவாமி திருக்கோவில்
- நல்லாடை -
தலபெருமை
கார்த்திகை மாத பரணி: பரணி நட்சத்திரக்காரர்கள் தம் வாழ்நாளில் அடிக்கடி நல்லாடை அக்னீஸ்வரர் தலம் சென்று விசேஷ வழிபாடு செய்வது சிறப்பு. பரணியில் பிறந்தோர் தரணி ஆள்வர் என்பது பழமொழி. இங்கு சிவன் அக்னி சொரூபமாக திகழ்வதால், பரணி நட்சத்திரக்காரர்கள் இவருக்கு ஹோமம் செய்து வழிபடுவது சிறப்பு. குறிப்பாக, கார்த்திகை மாதம் பரணி நட்சத்திரத்தன்று ஹோமம் செய்தால் பலன் இரட்டிப்பாக இருக்கும் என்பது நம்பிக்கை. இத்தலம் மேற்கு நோக்கி அமைந்ததாகும். மேற்கு நோக்கிய கோயில்களில், முழு நம்பிக்கையுடன் செய்யப்படும் பிரார்த்தனைக்கு அதிக பலனுண்டு. இந்தக் கோயில்களில் இறைவன் மிகுந்த உக்கிரத்துடன் இருப்பார் என்பது ஐதீகம். இங்கு அக்னீஸ்வரர் மேற்கு நோக்கியும், அம்மன் சுந்தரநாயகி தெற்கு நோக்கியும் அருள்பாலிக்கிறார்கள். சுவாமி அக்னி சொரூபமாக உள்ளதால், அதனைத் தணிக்கும் வகையில் மூலஸ்தானத்தில் உள்ள லிங்கத்தைச் சுற்றி தண்ணீர் ஊற்றப்பட்டு இருப்பது சிறப்பம்சம். இறைவனுக்கே ஆடை நெய்து கொடுத்த காரணத்தினால் இத்தலம் நெய்தலாடை என வழங்கப்பட்டு, நாளடைவில் மருவி நல்லாடை ஆனது.
சிறப்பம்சம்
அதிசயத்தின் அடிப்படையில்: இத்தல இறைவன் மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். மூலஸ்தானத்தில் உள்ள லிங்கத்தை சுற்றி ஒரு தாழ்வான பகுதி உள்ளது. சுவாமி அக்னீஸ்வரர் அக்னி சொரூபமாக உள்ளதால் அதனை தணிக்கும் வகையில் அந்த தாழ்வான பகுதியில் தண்ணீர் ஊற்றப்பட்டு இருப்பது தலத்தின் முக்கிய சிறப்பம்சமாகும்.

